dimanche 12 mai 2013

தென்றல் - அருணாசெல்வம்

கம்பன் கழகம் நடத்தும் தங்கள் பாட்டரங்கம்
27.04.2013 சனிக்கிழமை மாலை 18.00 மணி


தென்றல்!!

தொட்டே அணைக்க முடியாது!
         தொடாமல் இருக்க முடியாது!
கட்டுக் கடங்கி நிற்காது
         கண்ணால் பார்க்க முடியாது!
கொட்டிக் கொடுக்க முடியாது!
         கூட்டித் தள்ள முடியாது!
பட்டு உணர்வைத் தரும்தென்றல்
         பருவக் கால வசந்தமது!

மெல்லத் தவழும் வேளையிலே
         மேலும் கேட்டு மனமேங்கும்!
வல்ல தனமாய் ஆகையிலே
         வலிமை மிகுந்து பயங்கொடுக்கும்!
எல்லை எதுவும் அதற்கில்லை!
         எழிலாம் உலகில் இதன்வரவோ
இல்லை என்றால் இயக்கமிலை!
         இனிமை பொங்கும் வாழ்வுமிலை!!

தண்ணீர்க் குலத்தில் தவழ்ந்துவந்தால்
         தனிமை ஏக்கம் தரும்தென்றல்!
பெண்ணின் மேனி தொட்டுவந்தால்
         பெண்மை தொட்ட சுகத்தென்றல்!
கண்ணைத் தொட்டுப் போனாலும்
         கண்ணீர் சிந்த வைக்காமல்
மண்ணில் மட்டும் வாழுகின்ற
         மாசே அற்ற நறுந்தென்றல்!!


சின்ன சின்ன உயிர்களுக்கும்
         சீராய் இதயம் துடிக்கவைக்கும்!
வண்ண வண்ண மலர்களையும்
         வளமாய் வாழ வழிவகுக்கும்!
எண்ணி எழுத முடியாத
         இயலாய் வாழ்வில் இருப்பதனால்
சின்ன சின்ன கவிச்சிறையில்
         சிக்கி அடைக்க முடியவில்லை!



அருணா செல்வம்


Aucun commentaire:

Enregistrer un commentaire